Wednesday, January 20, 2016

தளராத மாற்றுத்திறனாளி – இன்றொரு தகவல்



இன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டு இருந்தபோது, மனது பழைய நினைவுகளில் ஒன்றுக்கு தாவிவிட்டது. சுமார் 9 வருடங்களுக்கு முன் சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் மேடுபள்ள சாலையில் கால்கள் செயலிழந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் சுமார் 16 வயதுள்ளவன், மூன்று சக்கர வண்டியில், ஒரு சிறிய மூட்டையை வைத்துக் கொண்டு, சிரமத்துடன் வந்துக்கொண்டு இருந்தான்.

அவனை விசாரித்தபோது, கோலமாவு விற்பனை செய்வதாக கூறினான். வருமானம் குறைவுதான். குடும்பம் ஏழ்மையில் இருப்பதால், தானும் பாரமாக இருக்க விரும்பாமல், என்னால் முடிந்த வருமானத்தை ஈட்டி குடும்பத்திற்கு கொடுப்பதாக கூறினான். மனம் கனத்து விட்டது. ஒரு பக்கம் அவனை நினைத்து பெருமையும் அடைந்தேன். பச்சாதாபமாக பேசி, தன்னிரக்கம் அடைய செய்யக்கூடாதென நினைத்து, பாராட்டியதுடன், விற்பனையை அதிகரிக்க சில யோசனைகளையும் தெரிவித்தேன்.

1) எத்தனையோ விழாக்களுக்கு வண்ணக் கோலப்பொடி தேவையுள்ளதால், அதை இத்துடன் சேர்த்து விற்கலாம். பாரம் ஒன்றும் அதிகமில்லை. பாக்கெட்டுகளில் உள்ளதையோ, மொத்தமாக வாங்கி, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்கலாம்.

2) கோலப்பொடி தினமும் எல்லோரும் வாங்கபோவதில்லை. எனவே மாற்று விற்பனையாக நல்ல தரமான லோக்கல் பெனாயில், சேம்பு, சோப்புத்தூள், ஆசிட் போன்றவற்றை வாங்கியோ, தயாரித்தோ விற்கலாம்.

3) ஒரு பகுதியில் (ஏரியாவில்) ஒரு நாள் கோலப்பொடி, மறுநாள் மாற்றுப் பொருட்கள் என விற்பனை செய்தால் வருமானம் கூடும்.

4) முக்கியமாக பொருட்களாக இருந்தாலும், மற்றவர்கள் விற்பதை விட நாம் தரமானதாக விற்க வேண்டும்.

5) வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு, கடைகளில் விற்பதை விட சிறிது குறைவாக விற்றால், உன்னிடம் தவறாமல் வாங்குவார்கள்.

6) பொருட்கள் மொத்தமாக வாங்கி பேக் செய்தாலும், பெனாயில், சேம்பு தயாரித்தாலும், கடைகளுக்கும் போடலாம்.

7) மிக முக்கியமானது: வருகின்ற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, வங்கியில் சேமிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை தேவைக்கு ஏற்ப தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். மற்றதைதான் குடும்ப செலவு செய்ய வேண்டும். அதிலும் அனாவசிய, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். நல்ல உடல் நிலையுடையவர்களே தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, குடும்பம், உடல் நிலை சீர்கெட்டு அவதிபடுகிறார்கள். அதனால் மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருந்தால், தற்போதுள்ள சிரமம் கூடுதலாகாமல் இருக்குமென அந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, நீண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விட்டு, தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள சொல்லி விடைப்பெற்றேன்.

8) அந்த சமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மோட்டார் ஸ்கூட்டர்கள் அரசு சார்பில் வழங்கப்படாததால், அதைக்குறித்து அவனுக்கு சொல்லவில்லை.

மற்றொரு சமயம் அந்த மாற்றுத்திறனாளி சிறுவன், எனை சந்தித்து தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தது, எமக்கு ஆனந்தம் அளித்தது. எதற்காக இன்று அவனைப்பற்றி இவ்வளவு என நினைக்கிறீர்களா?

#சமிப சென்னை பெருவெள்ளத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் நிலை என்னவோ? ஏனென்றால் அவனிருக்கும் குடிசை பகுதி அப்படி.

Wednesday, January 6, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன் - கேல்வி பதில் 7



கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்கள் புரிய, மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்களுக்கு மாவட்ட சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் மூலமாக மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் தேசியமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து, அதிகபட்சம் ரூபாய் 2௦௦௦௦/= வரை பெறலாம்.

செய்ய வேண்டியவை:
1)      பெட்டிக்கடை எனில் சாலை நடைப்பதைகள் மற்றும் அரசு இடங்களாக இருந்தால், அங்கு கடை வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
2)      உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உங்களுக்கு கடனில்லா சான்றும், மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடனுக்கு, கடன் தர ஒப்புதலும் பெறவேண்டும்.
3)      முக்கியமாக நீங்கள் கேட்க கூடிய கடனுக்கு, என்னென்ன செலவுகளுக்காக என்ற விபர பட்டியலை, வங்கி அதிகாரியின் அறிவுரைப்படி வழங்கவேண்டும்.
4)      அந்த வங்கியில் உங்கள் பெயரில் கணக்கு இருக்கவேண்டும் அல்லது புதிதாய் துவக்கவேண்டும். உங்கள் பங்கு தொகையினை வங்கியில் குறிப்பிடும் அளவுக்கு, உங்கள் கணக்கில் செலுத்தவேண்டும்.
5)       மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகநலத்துறை அலுவலகத்தில் கடன், மற்றும் அதற்குரிய மானிய (சப்சீடி) அளவுக்கும் ஒப்புதல் பெறவேண்டும்.
6)      வீட்டிலிருந்தபடி அல்லது வேறு தொழில்களுக்கும் மானியத்துடன் கடன் பெறலாம்.

7)      சமூகநலத்துறை அலுவலக ஒப்புதலை, வங்கியில் கொடுத்து கடனை பெற்று தொழில் நடத்தலாம்.     

8)      முதலும் கடைசியுமாக ஒன்று: நீங்கள் வாங்கும் கடனுக்குறிய தவணைத்தொகையை, தவணை தவறாமல் சரியான நாளில் முழுமையாக செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தாமல், மானியத்தின் முழு பலனையும் அனுபவிக்கமுடியும்.

9)      மேலும் தொழிலுக்கான புது கடன் அல்லது வளர்ச்சி கடனை, எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பெற்று, நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து, சாதனையாளராகவும், சிறப்பான உயர் நிலையையும்  அடைய முடியும்.


*தொழிலிலே உயர்ந்து, வாழ்வில் சிறப்பாய் வாழ. வாழ்த்துக்கள் நண்பர்களே!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் - கேல்வி பதில் 6


 கேள்வி: 40% ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்குமா?
பதில்: 40% சதவீதமும், அதற்கு மேல் ஊனமுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும்.
கேள்வி: 40% சதவீத ஊனமுடைய நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிகிறேன். வீட்டிலிருந்து சென்று வர, அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் பெற என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பணியாற்றுகின்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம், குடும்ப அட்டை நகலுடன், விண்ணப்பம் எழுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் நடைப்பெறும் குறைதீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட  சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலக அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.
 கேள்வி: வட்டாச்சியர் (தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம்  விண்ணப்பிக்கலாமா / கூடாதா?
பதில்: விண்ணப்பிக்கலாம். ஆனால், மாவட்ட அளவில்   மாற்றுத்திறனாளிகளுக்கான நல சமூகநலத்துறை அலுவலகம் தனியாகவே இருப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதே, விரைவான நடவடிக்கைக்கும், விண்ணப்பத்தின் நிலைக்குறித்த தகவலை அறிந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு சிரமமுடையவர்கள், தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம் / அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:
1)      நடக்கவியலா மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் கிடைக்கும்.
2)      கல்லூரியில் படிப்பவர்கள், அரசு / தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சொந்த தொழில் புரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3)      படிப்பவர்கள், பணிபுரிபவர்கள், அந்தந்த தலைமையிடத்திலிருந்து சான்று பெற்று (உண்மை சான்றும்), வாடகையிடங்களில் தொழில் செய்பவர்கள், அவ்விடத்தின் வாடகை சான்று, சொந்த இடமாக இருப்பின், இருப்பிட வரி / தொழில் வரி சான்று அல்லது மின்னிணைப்பு கட்டணம் ( இதில் தேவையானதை நகல் இணைக்க வேண்டும்)
4)      விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தில் இடம், தேதி குறிப்பிடுவதுடன், இணைப்பு சான்றுகளையும் பற்றியும் முடிவில் தவறாமல் குறிப்பிடவும்.
5)      விண்ணப்பத்தையும், வேறு உண்மை சான்றுகள் இணைத்தால் அதையும் நகல் எடுத்து  பத்திர படுத்திக்கொள்வது நல்லது. 

#இதில் தவறு, குறைப்பாடுகள் இருப்பின் தெரிந்தவர்கள் எடுத்துக்கூறி திருத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.